
அறிவோமா அருள்மிகு நகரத்தார்களை
அத்தியாயம் – 5:
காசியின் மகிமை ஏட்டில் அடங்காது, எழுத்தில் அடங்காது என்று கூறுவர்.
“திருவாரூர் – பிறக்க முக்தி. காசி – இறக்க முக்தி. காஞ்சி – வசிக்க முக்தி. திருவண்ணாமலை - நினைக்க முக்தி”.
எனும் ஆன்றோர் மொழிக்கு ஏற்ப, காசியில் இறப்போர்க்கு, ஆனந்தத்திலேயே, பேரானந்தமான அடுத்த பிறவி எடுக்காமல், ஈசனின் பாதகமலங்களில் முக்தி கிடைக்கும். ஆன்றோர்களும், பெரியோர்களும், தங்களது அந்திம காலத்தில் காசி ஷேத்திரத்தை அடைந்து, மூன்று நேரமும் கங்கை நீராடி, ஜபங்களை முடித்து, பிரணவ மந்திரம் சொல்லி, ஈசனின் சேவடி கமலங்களில் முக்தி பெறுவர்.
குபேரன் காசி ஸ்தலத்தில் தவமிருந்து ஈசானருளால் நவநிதிகளைப் பெற்றுத் திசைகவளருள் ஒருவராகும் பேரு பெற்றான். காமதேனு காசியில் ஈசனை லிங்கவடிவில் பிரதிஷ்டை செய்து பரமனின் பேரருளைப் பெற்றது. அந்த லிங்கம் கோப்பியேசுவரர் எனும் திருநாமாத்தைப் பெற்றது. பிரம்மதேவன் காசியில் கபிலாகராம் என்ற தடாகத்தின் அருகே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அந்த லிங்கத்திற்கு ரிஷிபத்துவாசன் என்ற பெயர் ஏற்பட்டது. அவர் மேலும் சங்கமஈசுவரர் என்ற திருநாமத்துடன் கூடிய மற்றொரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.
ஒரு சமயம் பார்வதி தேவி காசி நந்தவனத்தில் பந்து விளையாடும்போது இரு அரக்கர்கள் வேங்கை உருவம் கொண்டு அவர் முன் வந்து, பயங்கரமாக கர்ஜித்து அச்சுறுத்தினர். அதனால் சீனம் கொண்ட பார்வதி தேவி அவர்கள் மீது அந்த பந்தை எறிந்து, இருவரையும் கொன்றார். அரக்கர்களை அழித்துக் கொன்ற அந்த பந்து லிங்கரூபத்தில் நிலைப்பெற்றது. அந்த லிங்கம் பந்துகேஸ்வரர் என்று பெயர் பெற்றது. பராசக்தியைத் திருமகளாக பெற்ற இமவான், காசியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஈசனை வழிபட்டார். அந்த லிங்கத்திற்கு சைலேசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இதுபோல் தேவர்களும், அசுரர்களும், முனிவர்களும் காசி மாநகரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, வழிபாடுகள் புரிந்து ஈசனின் பேரருளைப் பரிபூர்ணமாக பெற்றனர். இதுவரை காசியின் பெருமையை அடியேன் சொன்னது வெறும் கடுகு அளவு தான். இன்னும் எவ்வளவோ காசியின் சொல்லிக் கொண்டு போகலாம். ஈசனை மூர்த்தி சொரூபமாக வழிபடுவோர்க்கு எல்லா வித சுகபோகங்களும் கிட்டும். ஈசனின் திருவுருவங்கள் என்ன என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
- புத்தகத்தில் படித்தது.
தன் கணவனின் பேச்சைக் கேட்டு புனிதவதியார் மிகவும் மனம் வருந்தினர். தன்னுடைய இளமையையும், அழகையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும் தான், அழகோடும் இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மையின் இயல்பினை உணர்ந்த புனிதவதியார், உடனே சிவபெருமானை நினைத்து, ஈசனே, இது வரை என் கணவருக்காக தாங்கி நின்ற இந்த அழகு உடல் இனிமேல் எனக்கு வேண்டாம். இந்த அழகு மிகுந்த உடலை யாரும் இனி பார்க்க கூடாது. அதனால், எனக்கு பேய் வடிவம் கொடுத்தருள வேண்டும் என்றும் வேண்டினார். அவருடைய வேண்டுதலை செவி சாய்த்த சிவபெருமானும், புனிதவதியாருக்கு, பேய் வடிவத்தைக் கொடுத்து அருள் புரிந்தார். புனிதவதியார் தன் அழகு மிகுந்த உடல் மறைந்து, எலும்பும் தோலுமாக காட்சி அளித்தார். அங்கு கூடி நின்ற உறவினர்களுக்கு எல்லாம் அதிசியமாக போய் விட்டது. உடனே அவர்கள் எல்லோரும் அவரை வணங்கினார்கள்.

இந்த உருவத்துடன் அவர்கள் நல்ல தமிழ் புலமையும் பெற்றார்கள். நிறைய பாடல்களையும் பாடினார்கள். “திருவந்தாதி”, “மூத்த திருப்பதிகம்”, “திருவிரட்டை மணிமாலை எனும் திருப்பிரபந்தத்தையும்” ஆகிய நூல்களை இயற்றினார். இதனால் புனிதவதியார், காரைக்கால் அம்மையார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இரவும், பகலும் எல்லா நேரங்களிலும் சிவனை நினைத்தும், பூசை செய்தும் வாழ்ந்து வந்தார். ஒரு நாள், அவருக்கு திரு கைலாய மலைக்குச் சென்று அந்த பரமசிவனை தரிசிக்க எண்ணினார். தான் இருக்கும் இடத்திலிருந்து, பாதயாத்திரையாக கைலாய மலைக்குச் சென்றார். அங்கு மலையின் மீது தன் காலால் நடந்தால், அந்த இடம் மாசுப் பட்டு விடும் என்று எண்ணி, தன் தலையால் மலையேறினார். (அதாவது தலை கீழாக நடந்தார்). புனிதவதியார் அங்கு தலை கீழாக வந்துக் கொண்டிருப்பதை பார்த்த பார்வதி தேவி, ஈஸ்வரனிடம், தலையினால் நடந்து வருகின்ற எலும்பும் தோலுமாய் உருவம் கொண்டவரின் அன்பை நாம் என்ன வென்று சொல்லுவது என்று கூறினார். அதற்கு இறைவன், தேவி! இவர் நம்மை வழிபடும் அம்மையார். இந்த உருவத்தை வேண்டும்மென்று தான் நம்மிடமிருந்து பெற்றார் என்றார். அதனைக் கேட்ட பார்வதி தேவியோ! எல்லோரும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும், முதுமையிலும், இளமை வேண்டும் என்று தான் வேண்டுவர்கள். ஆனால் இவரோ, இளமையிலேயே, முதுமை வேண்டும் என்று விரும்பி இருக்கிறாரே, என்று அதிசியப்பட்டார். புனிதவதியாரும், சிவபெருமான் இருக்கிற இடத்திற்கு அருகில் வந்து விட்டார். இவரைப் பார்த்த சிவபெருமனோ! “அம்மையே” என்று அன்பாக அழைத்தார். தாய் தந்தை இல்லாத சிவபெருமானே, இவரைப் பார்த்து அம்மையே என்று அழைக்கிறார் என்றால், இவருடைய பக்தியை என்னவென்று சொல்வது. உடனே, புனிதவதியாரும் அப்பா! என்று கூறி, சிவபெருமானின் காலடியில் விழுந்து வணங்கினார். அம்மையே! உமக்கு என்ன வாரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அம்மையாரோ, ஈசனே! எனக்கு இன்பத்தில் எல்லாம் சிறந்த இன்பமான “மோட்சம்” வேண்டும் என்றார். நான் மீண்டும் பிறக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை, நான் மீண்டும் பிறக்க நேர்ந்தால், உங்களை மறக்காமல் இருக்க வேண்டும். அத்தோடு, தாங்கள் “ஆனந்த தாண்டவம்” ஆடும்போது, நான் தங்கள் திருவடிக்கீழ் இருந்து அதைப் பார்க்க வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும், தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில், நாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து கண்டுக்களிப்பாயாக என்று அருள் புரிந்தார். அம்மையாருக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. பிறகு அவர் திருவாலங்காட்டை அடைந்து, அந்த ஈசுவரனின் ஆனந்த நடனத்தை கண்டுக் களித்தார். அவ்வாறு கண்டு களிக்கும் போது, திருவாலங்காட்டுத் திருவந்தாதி, மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை ஆகிய பாடல் நூல்களை இயற்றினார்.
நாம் நம் நகரத்தார்களின் இரண்டாவது அருளாளரைப் பற்றி தெரிந்துக் கொண்டோம். சரி அடுத்த அருளாளரைப் பற்றி பார்ப்போமா! இவர் காவேரிபூம்பட்டினத்தில் வாழ்ந்த பட்டினத்தார் ஆவார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் – திருவெண்காடர். பின் ஏன் அவர் பட்டினத்தார் என்று அழைக்கப்பட்டார். அதற்கு விடை அடுத்த அத்தியாயத்தில்..........
சென்ற அத்தியாயத்தின் விடைகள்:
1. பரமதத்தன் இரண்டாவது மாங்கனியை சாப்பிட்டானா?
- இல்லை.
2. உறவினர்களுக்கு பரமதத்தணும், புனிதவதியாரும் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரிந்ததா?
- இல்லை.
3. காரைக்கால் அம்மையார் எந்த மாதத்தில் பிறந்தார்?
- பங்குனி மாதம்
4. பரமதத்தன் எந்த நாட்டிற்கு வாணிபம் செய்ய சென்றான்?
– பாண்டிய நாட்டிற்கு
இந்த அத்தியாயத்தின் கேள்விகள்:
1. புனிதவதியார் என்ன வரத்தை இறைவனிடம் வேண்டினார்?
2. புனிதவதியார் எதற்காக அந்த வரத்தை இறைவனிடம் வேண்டினார்?
3. காரைக்கால் அம்மையார் எங்கு சென்று ஈசுவரணை சந்தித்தார்?
4. காரைக்கால் அம்மையார் எங்கு சென்று இறைவனின் நடனத்தை கண்டு களித்தார்?
5. காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை எந்த மாதத்தில், எந்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது?
“பேறு கேட்டல்/போரு கேட்டல்” – குழந்தைப் பேற்றைக் கேட்பதை நாம் பேறு கேட்டல் என்று கூறுகிறோம். வேறு ஒரு நிகழ்ச்சியை குறித்து கேட்பதற்கும் நாம் இதே சொல்லை, ஒரு பெண் பெரியவளாகும் போதும் (பூப்படைவது) பயன்படுத்துகிறோம். இதற்கு சரியான காரணமும் இருக்கிறது. அதாவது ஒரு பெண் பூப்படையும்போது, அவள் தாயாவதற்கான தகுதியை பெறுகிறாள். இதனால் தான், நாம் ஒரு பெண் பூப்படைந்தவுடன், அவள் பெற்றோரிடம், பேரன் உண்டா? என்று கேட்கிறோம்.
கேள்வி: “கிலுக்கி எடுப்பு என்றால் என்ன? இந்த விழா எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
இதற்கான பதிலோடு மீண்டும் உங்களை அடுத்த அத்தியாயதில் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைப்பெறுவது,
என்றும் உங்கள்
சொக்கன்
